இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருடன் புகைப்படம்... காதலியை போட்டுத்தள்ளிய காதலன்!
Picture with a male friend on Instagram A boyfriend who has pushed away his girlfriend
இன்ஸ்டாகிராமில் வேறொரு ஆண் நண்பருடன் புகைப்படம் வைத்துவிட்டு பேசுவதை தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை போட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் பொன்முத்து நகரை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகள் அஸ்விகா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.அப்போது உடுமலை ரோடு அண்ணாமலையார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் பிரவீன் குமாருக்கும் அஸ்விகாவுக்கும், பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் அஸ்விகா கடந்த சில நாட்களாக பிரவீன் குமாருடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் நேற்று மதியம் அஸ்விகாவின் வீட்டிற்கு சென்று தனியாக இருந்த அஸ்விகாவை தான் வைத்து இருந்த கத்தியால், முகம், கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் குத்திவிட்டு சென்றார். இதில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விகாவை அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விகாவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து பிரவீன்குமார் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்விகாவின் வீட்டு அருகில் பிரவீன்குமார் குடும்பத்துடன் வசித்து வந்ததும் அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.தொடர்ந்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதை அறிந்த பெற்றோர் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அஸ்விகா, தன் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிகிறது.
இதைப்பார்த்த பிரவீன் குமார், அஸ்விகாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியான பதில் கூறாமல் கடந்த சில நாட்களாக பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அஸ்விகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சென்று கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Picture with a male friend on Instagram A boyfriend who has pushed away his girlfriend