செல்போனைப் பறித்த பெற்றோர்... 30 சத்து மாத்திரைகளை விழுங்கி 10-ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு...! - சேலத்தில் சோகம்...!
Parents snatched away cell phone 10th grade student swallows 30 nutritional pills ends tragedy Tragedy Salem
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, செல்போன் பயன்படுத்தியதற்காக பெற்றோர் கண்டித்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவி சத்து மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
இவரது மனைவி வரலட்சுமி (35). இந்த தம்பதிக்கு தேவி ஸ்ரீ (14) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் இருந்தனர். சிவக்குமார் வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, சலவைத் தூள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.தேவி ஸ்ரீ, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் பெற்றோர் அவரை கண்டித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் தேவி ஸ்ரீ செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குச் செல்லாமல் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவாய் என்றும் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மாணவியிடம் இருந்து செல்போனை வாங்கி வைத்ததாகவும் தெரிகிறது.இதையடுத்து பள்ளிக்குச் சென்ற தேவி ஸ்ரீ, மதியம் 12.30 மணியளவில் வயிற்று வலிப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு வந்தனர்.
அப்போது மாணவியிடம் விசாரித்தபோது, பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து, பள்ளியில் வழங்கப்பட்ட 10 சத்து மாத்திரைகளை வீட்டில் வைத்து உட்கொண்டதாகவும், பின்னர் பள்ளியில் மேலும் 20 மாத்திரைகளை உட்கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை உடனடியாக மீட்டு தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.ஆனால், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவி ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தொளசம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Parents snatched away cell phone 10th grade student swallows 30 nutritional pills ends tragedy Tragedy Salem