மக்களின் தாகம் தீர்க்க முடியாத அரசு...! - குடிநீர் தட்டுப்பாட்டுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!
government that cannot quench thirst people Nayinar Nagendran fury against water shortage
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, அவசர நடவடிக்கைகளுக்காக உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது,"தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்கள் தங்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாத நிலையில், நிலைமையை சமாளிக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் தவெக அரசும், குடிநீர் வடிகால் வாரியமும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
மாநில நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 முக்கிய அணைகளில் 59 அணைகள் வறண்டு விட்டன. இதனுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளதால், பல மாவட்டங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இத்தகைய நெருக்கடியான சூழலில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை.
முதலமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறையிடம் நிதி கோருவதற்குக்கூட அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இது தற்போதைய ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட உரிய முறையில் வழங்கத் தவறிய தவெக அரசு, இனியாவது விழித்தெழ வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட அவசரப் பணிகளுக்கு தேவையான சிறப்பு நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
மேலும், தற்போதைய வறட்சி நிலையை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள நீராதாரங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களை முழுமையாகத் தூர்வாரி சீரமைக்க வேண்டும். ஏரி, குளங்களின் கரைகளைப் பலப்படுத்தி உயர்த்துவதுடன், அவற்றில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, எதிர்காலத்தில் மழைநீரை அதிக அளவில் சேமிக்கும் வகையில் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நீண்டகால பயன் கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்"என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
government that cannot quench thirst people Nayinar Nagendran fury against water shortage