5,000 பேருக்கு மட்டுமே அனுமதி...! முதல்வர் விஜய்யின் கரூர் விசிட் குறித்து புஸ்ஸி ஆனந்த் திட்டவட்ட அறிவிப்பு...!
Only 5000 people allowed Pussy Anand categorical announcement regarding Chief Minister Vijay visit Karur
கரூரில் இன்று நடைபெறவுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், வேறு யாரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டாம் என்றும் த.வெ.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் காதப்பாறையில் உள்ள கொங்கு கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான அட்லஸ் கலையரங்க வளாகத்தில் மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

காவலர்கள் வகுத்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப, இந்நிகழ்ச்சி முழுமையாக முன்கூட்டியே அனுமதி பெற்றவர்களுக்காக மட்டுமே மாவட்ட நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். இதர நபர்கள் யாருக்கும் எந்தவித விதிவிலக்கும் இன்றி அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்துவமான QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதிச் சீட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவ-மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு QR குறியீடு நுழைவுச் சீட்டு வழங்கப்படவில்லை.
எனவே, அவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி பெற்றவர்களுக்காக குடிநீர், மருத்துவ வசதி, அவசர உதவி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுழைவுச் சீட்டு இல்லாத கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டாம் என்றும், அவர்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நேரலை வாயிலாக நிகழ்ச்சியைப் பார்வையிட்டு, அனுமதி பெற்றவர்கள் சிரமமின்றி பங்கேற்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் புஸ்சி ஆனந்த் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Only 5000 people allowed Pussy Anand categorical announcement regarding Chief Minister Vijay visit Karur