இனி ‘நோ’ கலர் அப்பளம்...! தமிழ்நாட்டில் வண்ண அப்பளங்கள் விற்க அதிரடி தடை...! - மீறினால் பாயும் கடும் நடவடிக்கை...!
Now No colored appalam ban selling colored appalams Tamil Nadu Strict action taken if violated
பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை கவரும் நோக்கில் சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட பல்வேறு கண்கவர் நிறங்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் கலர் அப்பளங்களுக்கு தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக ஆய்வுகளில் உறுதியானதைத் தொடர்ந்து இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, சந்தைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொருட்காட்சிகளில் விற்பனை செய்யப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் வகைகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதோடு, சில தயாரிப்புகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்களும் கலக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்த ஆய்வுகளின் முடிவில், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை உணவுப் பாதுகாப்பு தரநிலைகளுக்கு முரணானவை என்பது தெரியவந்துள்ளது.
மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், சில மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ரசாயனச் சாயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
இந்த வகை அப்பளங்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உணவுப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலர் அப்பளங்களை அடிக்கடி உட்கொள்வதால் செரிமானக் கோளாறுகள், வயிற்றுப் புண், குடல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டில் குறைபாடு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நீண்டகாலமாக இந்த செயற்கை நிறமிகளை உட்கொள்வது உடலில் கட்டிகள் உருவாகும் அபாயத்தையும், புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தையும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக குழந்தைகள் இந்த வகை கலர் அப்பளங்களை சாப்பிடுவதால் ஒவ்வாமை, கவனச் சிதறல், உடல் வளர்ச்சியில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பாரம்பரிய முறையில் உளுந்து, அரிசி உள்ளிட்ட இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் அப்பளங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வாராந்திர சந்தைகள், சுற்றுலா தலங்கள், திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி தடை செய்யப்பட்ட அல்லது அதிகளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி கலர் அப்பளங்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முயற்சித்தால், உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், இயற்கையான நிறமும் தரமும் கொண்ட பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தேர்வு செய்து உட்கொள்வதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பாதுகாப்பான வழியாகும் என உணவுப் பாதுகாப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.
English Summary
Now No colored appalam ban selling colored appalams Tamil Nadu Strict action taken if violated