வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பணிகள் தீவிரம்...!
Northeast Monsoon precautionary measures intensified in four districts including Chennai
2025-2026 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென தமிழக அரசு ரூ.38.00 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, சென்னை பெருநகர எல்லைக்குள் 15 மண்டலங்களில் 78 பணிகளும், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 117 பணிகளும், நீர்வளத்துறை மூலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதில் பக்கிங்காம் கால்வாயில் 19 பணிகளும், கூவம் ஆற்றில் 19 பணிகளும், அடையாற்றில் 05 பணிகளும், இதர 35 பணிகள் வரவு கால்வாய்கள், ஏரிகள், உபரி நீர் கால்வாய், மடுவு பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், திடக்கழிவுகள், மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணிகள், 234 மிதக்கும் மண் கழிவு அகற்றும் இயந்திரங்களுடன் குப்பைகளை அகற்ற லாரிகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அத்துடன், முட்டுக்காடு, புதுப்பட்டினம், கூவம், அடையாறு, எண்ணூர் மற்றும் பழவேற்காடு, முகத்துவாரங்களில் சேர்ந்துள்ள மணல் படிவுகள் அகற்றும் பணிகளும் இதன் மூலம் நடைபெறுகிறது. குறித்த பணிகள் அனைத்தும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் முடியும் வகையில், பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் ஏனைய அதிகாரிகளும் நேரில் சென்று கள ஆய்வுகளை பார்வையிட்டனர்.
அனைத்து நீர்த்தேக்கங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கான கட்டிடங்களையும், கட்டுப்பாட்டு மையத்திற்கான மின் கணினி செயற்கைக்கோள் தகவல் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
English Summary
Northeast Monsoon precautionary measures intensified in four districts including Chennai