தூத்துக்குடி மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!!
MKStalin letter to Union Minister to rescue Tuticorin fishermen
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி மாலத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மீனவர்களை மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் அவர்களுக்கு 2.25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்திடவும் அவர்களை மீன்பிடி படகுகளுடன் மீட்டு தருமாறும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் "மாலத்தீவு கடலோர காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படத்தின் ஓட்டுநருக்கு கடந்த 01.11.2023 அன்று மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம் மாலத்தீவின் பண மதிப்பில் 42 லட்சம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகி 30 நாட்களுக்குள் அபராத தொகை செலுத்த வேண்டும். அதுவரை அந்த மீன்பிடி படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும். மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்த அபராத தொகை மிக அதிகமானது. அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது. இது அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும். இந்த பிரச்சனையில் மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மீன்பிடி படத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து, மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படங்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தக்க நேரத்தில் தலையிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கை கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும்" என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
MKStalin letter to Union Minister to rescue Tuticorin fishermen