முழு விவரம் தெரியவில்லை.. ஒடிசா போனதும் சொல்கிறேன்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!
Minister Udayanidhi interview at airport before leaving for Odisha
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற கொண்டிருக்கும் பொழுது சரக்கு ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளானதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் வரை தடம் புரண்டது.

இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் பலி என வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, அர்ச்சனா பட்நாயக், பணீந்திர ரெட்டி ஆகியோர் ஒடிசாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஒடிசா செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ரயில் விபத்து குறித்து விவரம் விசாரிக்க அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் செல்கிறேன். ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். தொடர்ந்து வருந்தத்தக்க செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. அங்கு சென்றவுடன் உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறேன். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ மருத்துவமனை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது" என செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Udayanidhi interview at airport before leaving for Odisha