எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் கலந்தாய்வு.!
MBBS and BDS Councelling from today
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மருத்துவ படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் 6ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேர் என மொத்தம் 36, 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும். விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பொது கலந்தாய்வு இன்று முதல் 25ஆம் தேதி வரை இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது.
English Summary
MBBS and BDS Councelling from today