நமது நாட்டை வளர்ந்த நாடாக்க நாம் முயற்சிக்கிறோம் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு..!
make our country a developed country - Delhi Chief Minister Kejriwal's speech
சென்னையில் இன்று நடந்த விழாவில், தமிழக அரசு பள்ளிகளில், 'டில்லி மாடல் பள்ளிகள்' என்ற திட்டத்தை , டில்லி முதல்வர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், புதுமைப் பெண் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினும், டில்லி மாடல் பள்ளிகள் என்ற திட்டத்தை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் கடந்த ஆட்சியில், மாதிரி பள்ளிகளாக மாற்றப்பட்டன. இந்த மாதிரி பள்ளிகள், தற்போது நடக்கும் தி.மு.க., ஆட்சியில், தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள் என, பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, டில்லியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளை பின்பற்றி, அந்த மாடலில், இந்த பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகளில், புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பின்பற்றப்பட உள்ளன. இந்த திட்டத்தில், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் என, மொத்தம் 41 பள்ளிகள் 'டில்லி மாடல்' பள்ளிகளாக செயல்பட உள்ளன.
இன்று சென்னை பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், டில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாடல் பள்ளி திட்டங்களை துவங்கி வைத்த பின்னர் அவர் பேசியதாவது, பிற மாநிலங்களில் உள்ள நல்ல திட்டங்களை எடுத்து கொள்ள வேண்டும். புதுமைப்பெண் திட்டம் பெண்களின் கல்விக்கு உதவுகிறது. பணக்காரர்கள் முதல் ஏழை வரை தரமான கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கொள்கை. தரமான கல்வியை அரசு பள்ளிகள் மூலம் நம்மால் கொடுக்க முடியும்.
நாட்டில் பள்ளி செல்லும் 27 கோடி மாணவர்களில் 18 கோடி பேர் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். நாடு முழுவதும் அரசு பள்ளிகளின் நிலைமை அனைவருக்கும் தெரியும். சில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் மோசமாக உள்ளது. நமது நாட்டை முதலிடத்திற்கு முன்னேற்றுவதர்கு மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம்.
நமது நாட்டை வளர்ந்த நாடாக்க நாம் முயற்சிக்கிறோம். 66 சதவீத பள்ளிகளில் மோசமான கல்வி கிடைத்தால், எப்படி வளர்ந்த நாடாக்க முடியும். அரசு பள்ளிகளில் தரமான கல்வியை கொடுக்க முடியாதவரை, வளர்ந்த நாடு என்ற கனவு நீண்ட தூரத்திலேயே இருக்கும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார். இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, மகேஷ் மற்றும் துறை அலுவலர்களும், பள்ளி மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.
English Summary
make our country a developed country - Delhi Chief Minister Kejriwal's speech