விஜய்க்கு எழுதிய கடிதம்...! கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட த.வெ.க பிரமுகர்...!
letter written Vijay TRP leader who committed suicide due debt
புதுச்சேரி மாவட்டம் குயவர் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 34 வயதான த.வெ.க. பிரமுகர் விக்ரம் என்பவர். இவர் இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ் .இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினி லாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதன் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் போனதால் வட்டிக்கு கடன் வாங்கியவர்களிடம் அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.இதுகுறித்து கடன் கொடுத்தவர்கள் அவ்வப்போது விக்ரமிற்கு போன் செய்து பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த விக்ரமிற்கு அவரது மனைவி ஆறுதல் தெரிவித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விக்ரம் தூக்கிட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை காவல் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் விக்ரம் தன் கைப்பட த.வெ.க. தலைவர் விஜய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த 3 பக்கம் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டகாவது,"நான் கடன் வாங்கிய தொகைக்கு சரியாக வட்டி செலுத்தி வந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியவில்லை.எனவே கடன் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்டு சித்ரவதை செய்தனர். மேலும் தவறாக பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது கடைசி ஆசை என்னவென்றால் கந்து வட்டி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா இனிவரும் ஆட்சி உங்களுடையதுதான். இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் அனைவரும் பயப்பட வேண்டும்.அண்ணா தயவு செய்து என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏதேனும் படிப்பு மற்றும் வாழ்க்கைக்கு பணம் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது மகள் ஏஞ்சல் நன்றாக படிப்பால் படிக்க வையுங்கள் அண்ணா...பிளீஸ் உங்களை நம்பிதான் உயிரை விடுகிறேன்.
ஹெல்ப் மை பேமலி.நான் இறந்த பிறகு என் உடலில் உள்ள உறுப்புகளை விற்று அதற்கு மாறாக எனது மனைவி மற்றும் பிள்ளைக்கு ஏதாவது பணம் தரவேண்டும் என்று வேண்டுகிறேன்" என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் விக்ரம் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து தொல்லை கொடுத்தவர்கள் யார்-யார்? என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
English Summary
letter written Vijay TRP leader who committed suicide due debt