தென்காசியில் அரசு வழக்கறிஞர் அரிவாளால் வெட்டி படுகொலை: வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்..!
Lawyers protest over the machete murder of a government lawyer in Tenkasi
தென்காசி மாவட்டம் ஊர் மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதுடைய முத்துக்குமாரசுவாமி. தென்காசி செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். மேலும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்தவர், கூலக்கடை பஜாரில் வழக்கறிஞர் அலுவலகமும் நடத்தி வந்தார்.
இன்று அவர் அலுவலகத்தில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரசுவாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பா இடத்திற்கு வந்த தென்காசி போலீசார், காயமடைந்த முத்துக்குமாரசுவாமியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த கொலைக்கான காரணம் மற்றும் மர்ம நபரின் அடையாளம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலையை தொடர்ந்து, வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி கொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள், தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் நடுபஜார் பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
Lawyers protest over the machete murder of a government lawyer in Tenkasi