நிலத்தகராறு கொலையில் முடிந்தது... 70 வயது முதியவர் உயிரிழப்பு...! நடந்தது என்ன...?
Land dispute ends murder 70 year old man dies What happened
கயத்தார் அருகே 50 சென்ட் நிலம் தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகியை கொலை வழக்கில் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
கயத்தார் தாலுகா வடக்கு ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (70). இவருக்கும், இவரது உறவினரும் இந்து முன்னணி வடக்கு மாவட்ட துணைத் தலைவருமான செல்லத்துரை (55) என்பவருக்கும் இடையே 50 சென்ட் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வேலுச்சாமி அந்த நிலத்தை அளவீடு செய்யாமல் வீடு கட்ட முயன்றதாகவும், இதற்கு செல்லத்துரை கடந்த 6 மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி வேலுச்சாமி சிலரை அழைத்து வந்து வீடு கட்டும் பணியை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அங்கு வந்த செல்லத்துரை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் இரும்பு குழாய் மற்றும் ஊன்றுகோலால் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் செல்லத்துரை ஊன்றுகோலால் தாக்கியதில் வேலுச்சாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் தொடர்பாக வேலுச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் கயத்தார் காவலர்கள் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில், மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செல்லத்துரையை, வேலுச்சாமி உயிரிழந்ததை தொடர்ந்து காவலர்கள் கொலை வழக்கில் கைது செய்தனர்.
நிலத்தகராறில் தொடங்கிய மோதல் முதியவரின் உயிரிழப்பில் முடிந்த சம்பவம் வடக்கு ஆத்திகுளம் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Land dispute ends murder 70 year old man dies What happened