குளங்களில் வளர்க்கப்பட்ட 36 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிப்பு... அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு ஏன்...?
36 tons Thai catfish raised in ponds destroyed Why did authorities take such drastic decision
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சட்டவிரோதமாக குளங்கள் அமைத்து வளர்க்கப்பட்டு வந்த தாய் கெளுத்தி மீன்களுக்கு எதிராக மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின்போது 11 குளங்களில் வளர்க்கப்பட்ட சுமார் 36 டன் தாய் கெளுத்தி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.பொதுமக்களிடம் இருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில், பர்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிசோலி–மகதுலா பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி குளங்களை அமைத்து தடை செய்யப்பட்ட தாய் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 11 குளங்களில் ஏராளமான தாய் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வளர்க்கப்பட்டிருந்த சுமார் 36 டன் மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் அந்த மீன்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு பெரிய பள்ளம் தோண்டி, மீன்களை அதில் கொட்டி முறையாக மூடி அழித்ததாக தெரிவிக்கப்படுகிறது.மீன்களை குளங்களில் இருந்து அகற்றும் பணியில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் அதிகாரிகளுக்கு உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 51 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரே நடவடிக்கையில் அழிக்கப்பட்ட 36 டன் மீன்களே இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மிகப்பெரிய அளவிலானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் கெளுத்தி எனப்படும் தாய் மங்கூர் மீன்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மனிதர்களின் உடல்நலத்துக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதால், இந்தியாவில் இவற்றை வளர்ப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இதனால் தடை செய்யப்பட்ட இந்த மீன் இனத்தை சட்டவிரோதமாக வளர்ப்பதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
36 tons Thai catfish raised in ponds destroyed Why did authorities take such drastic decision