தவெக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அதிருப்தியா...? 'மக்கள் விரோத அரசு' என வானதி சீனிவாசன் விமர்சனம்...!
Dissatisfaction few months tvk coming power Vanathi Srinivasan criticizes anti people government
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்ற விமர்சனத்தை பெற்றிருப்பதாக பா.ஜ.க. நிர்வாகி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அருகே கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை என்பவரின் மகளை காதலித்த 22 வயது இளைஞர் பிரவீன், ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பலால் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கையை முன்வைக்கும் கட்சியின் நிர்வாகியே, தனது மகளை காதலித்த இளைஞரை அந்தஸ்தை காரணமாகக் கொண்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலேயே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.லாக்கப் மரணங்கள், ஆணவக் கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீரமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக, சட்டமன்றத்தில் முதலமைச்சரை புகழ்ந்து பேசுவதிலேயே ஆளுங்கட்சியினர் கவனம் செலுத்துவதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
சாதி, சமூக அந்தஸ்து போன்ற காரணங்களை முன்வைத்து ஆணவக் கொலைகள் நடைபெறுவது, சமூகத்தில் சமத்துவம் இன்னும் முழுமையாக நிலைபெறவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள தவெக நிர்வாகி ஒருவரே இதுபோன்ற கொடுங்குற்றத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுவது, அந்த கட்சியின் கொள்கைகள் நடைமுறையில் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் பிரவீனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வானதி சீனிவாசன், இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dissatisfaction few months tvk coming power Vanathi Srinivasan criticizes anti people government