கரூர் சம்பவம்..யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை..நிர்மலா சீதாராமன் பதில்!
Karur incident I dont want to accuse anyone Nirmala Sitharamans response
தங்களது உறவினர்களை இழந்து அவர்கள் கதறி அழுவதை பார்க்க முடியவில்லை. அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை என நிர்மலா சீதாராமன் கூறினார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
"கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட பாதிப்புதான்,பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். தங்களது உறவினர்களை இழந்து அவர்கள் கதறி அழுவதை பார்க்க முடியவில்லை. அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை.
இனி இதுபோன்று ஒரு சம்பவம் நாட்டில் நடக்கக்கூடாது. சம்பவம் அறிந்து பிரதமர் மோடி கரூர் வருவதாக கூறினார். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் வர முடியவில்லை.
இந்த சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.”இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Karur incident I dont want to accuse anyone Nirmala Sitharamans response