ஒரு பீடிக்கு இப்படியா...? பீர் பாட்டிலால் கூலித்தொழிலாளி தலையில் கொடூரத் தாக்குதல்...!
Is this what happens beedi laborer brutally attacked head beer bottle
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் சின்னகருப்பணசாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). கூலித்தொழிலாளியான இவர், குமரலிங்கம் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் சதீஷ்குமாரிடம் பீடி கேட்டுள்ளனர்.

ஆனால், தன்னிடம் பீடி இல்லை என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சிறிது நேரத்தில் வார்த்தை மோதல் முற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த 3 பேரும் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும், அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலில் சதீஷ்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குமரலிங்கம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரையும் காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Is this what happens beedi laborer brutally attacked head beer bottle