ஸ்டெதாஸ்கோப் மாட்டும் அரசுப் பள்ளி மாணவர்கள்...! 614 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் உறுதி...!
Government school students who dont have stethoscopes Medical seats guaranteed 614 government school students
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 614 மாணவ, மாணவியருக்கு மருத்துவ படிப்பு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"நடப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 510 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிலும், 104 மாணவர்களுக்கு பல் மருத்துவப் படிப்பிலும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்தம் 614 அரசு பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ். இடங்களை பொறுத்தவரை, 323 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 மாணவர்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் கிடைத்துள்ளன.
மேலும், 166 மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 9 மாணவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவப் படிப்பு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பல் மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, 16 மாணவர்களுக்கு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளிலும், 88 மாணவர்களுக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள திறமையான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியை பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் நோக்கில், அவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி, அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேலும் வலுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Government school students who dont have stethoscopes Medical seats guaranteed 614 government school students