புராதனம் மற்றும் தொன்மை பாதிப்பு; திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு இடைக்கால தடை..!
Interim Stay on Renovation Works at the Thirukannapuram Sowriraja Perumal Temple
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜ பெருமாள் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை போன்று பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்குள் கண்ணபுரம் நாயகி சன்னதி உள்ளிட்ட பல சன்னதிகளுடன், மண்டபத்தில் அஷ்ட லட்சுமி ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் வரலாற்று கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.
புராதன கட்டிடமான இந்த திருக்கோயிலில் புதுப்பிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கோயிலின் இந்த திருப்பணிகளில் சிமென்ட் உள்ளிட்ட நவீன பொருட்களை பயன்படுத்துவதால், புராதனம் மற்றும் தொன்மை பாதிக்கப்படுவதாக கூறி, கோவிலின் சீரமைப்பு பணிகளுக்கு தடைவிதிக்க கோரி, தூக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப்பிரமணியன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தொன்மையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்களை பாதுகாக்க 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை தொடர அனுமதித்தால், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கட்டிடங்களுக்கு சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த சீரமைப்பு பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், இதுவரை ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் புராதன சின்ன ஆணையம் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலின் திருப்பணிகளை மேற்கொள்ள ஜூன் 30 வரை இடைக்காலத் தடை விதித்த, நீதிபதிகள் வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Interim Stay on Renovation Works at the Thirukannapuram Sowriraja Perumal Temple