யார் அந்த சோடா மணி..? 7வது நாளை எட்டிய ஐ.டி ரெய்டு.. கரூரில் அடங்காத பரபரப்பு..!!
Income Tax raids in Karur for the seventh day
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையானது இன்றுடன் 7வது நாளை எட்டியுள்ளது. நேற்று அரசு ஒப்பந்ததாரர் சங்கரின் கணக்காளரை வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது காரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் அலுவலகத்தில் கணக்கராக பணிபுரியும் ஷோபனா என்பவரை அவரது வீட்டில் இருந்து காரில் அழைத்துச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சங்கரின் மற்றொரு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனையானது அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மனைவி கரூர் பைபாஸில் கட்டி வரும் புது பங்களா, விநாயகா குவாரி உரிமையாளர் தங்கராஜ் என்பவரின் இல்லம், கணேஷ் முருகன் குவாரி மற்றும் நிதி நிறுவனம், தனியார் பேருந்து சேவை உரிமையாளர் குணசேகரன், ராம் விலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்றது
அதேபோன்று கொங்கு மெஸ், சக்தி மெஸ், சுரேந்தர் மெஸ் போன்ற சில இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பெயரளவிற்கு மெஸ் நடத்தப்பட்டு உள்ளே நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது வருமானவரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தரணி சரவணன், திமுக பிரமுகர் குமார், காளிபாளையம் பெரியசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் கரூரில் இன்றுடன் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனையானது அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சோதனை தொடர்கிறது. மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறையினர் சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமி என சந்தேகத்திற்குப்படும் நபரின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற வருவதாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில் "ராயனூர், கரூரில் உள்ள கே.சி.ஆர் சுப்பிரமணி என்கிற சோடா மணி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை. சோடா மணி செந்தில் பாலாஜி பினாமி என்று சந்தேகிக்கப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Income Tax raids in Karur for the seventh day