மீனவர்கள் வாழ்வில் தாக்கம்...! நள்ளிரவு முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில்...! - காரணம் என்ன...?
Impact fishermen lives Fishing ban Tamil Nadu from midnight What reason
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் படி, கடல் உயிரின வளத்தை காக்கவும், மீன் உற்பத்தி செழிக்கவும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை நீளும் இந்த காலப்பகுதி, மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மிக முக்கியமான பருவமாகும்.
இந்த நேரத்தில் விசைப்படகுகளின் எந்திர இரைச்சலும், பெரும் வலைகளின் தாக்கமும் மீன்களின் இனவளர்ச்சிக்கு இடையூறாக அமையாமல் தடுக்க, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை கடலுக்கு முழுமையான ‘ஓய்வு’ வழங்கப்படுகிறது. இதன் மூலம் சிறிய மீன் குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு, எதிர்காலத்தில் மீன் வளம் பெருகும் பாதை உருவாகிறது.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் ஆண்டுதோறும் நடைமுறையில் இருக்கும் இந்த தடைக்காலம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை அமலுக்கு வரும் தருணத்தில், எந்த மீனவரும் கடலில் இருக்கக்கூடாது என்பது கடுமையான விதிமுறையாகும். இதனால் கடலுக்குச் சென்றிருந்த அனைத்து விசைப்படகுகளும் நேற்று இரவே அவசரமாக கரை திரும்பியுள்ளன.
இதன் விளைவாக, ராமேசுவரம் துறைமுகத்தில் மட்டும் சுமார் 800 விசைப்படகுகள் நங்கூரமிட்டு ஒழுங்காக வரிசைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, கீழக்கரை, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சேர்த்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் துறைமுகங்களின் அருகே அமைதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தடையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்களின் வரத்து குறைவாக இருக்கும் நிலையில், மீன் சந்தைகளில் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயரக்கூடும் என தெரவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ.8,000 நிவாரணத் தொகையை, தேர்தல் சூழ்நிலை காரணமாக தமிழக அரசு கடந்த மாதமே அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தி உதவி செய்துள்ளது.
English Summary
Impact fishermen lives Fishing ban Tamil Nadu from midnight What reason