‘உலகநாயகன்’ பெயரை தவறாக பயன்படுத்தினால் தடை! - நீதிமன்றம் சென்ற கமல்ஹாசன்
If name Ulaganayagan misused there ban Kamal Haasan court
நடிகர் கமல்ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பிரபல பட்டம் ஆகியவற்றை அனுமதி இல்லாமல் வணிக லாபத்திற்காக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
‘நீயே விடை’ என்ற நிறுவனம், எந்தவிதமான அனுமதியும் பெறாமல் கமல்ஹாசனின் புகைப்படங்கள், புகழ்பெற்ற வசனங்கள் மற்றும் அடையாளங்களை டி-சர்ட் உள்ளிட்ட பொருட்களில் அச்சிட்டு விற்பனை செய்து வருவதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவயதிலேயே திரையுலகில் காலடி வைத்த பல தசாப்தங்களாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து, தனக்கென ஒரு உலகளாவிய அடையாளத்தை உருவாக்கியுள்ளேன் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடையாளமும் நற்பெயரும் வணிக லாபத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவது தனது தனிப்பட்ட உரிமைகளுக்கும் கலைஞராக பெற்ற மரியாதைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாக கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை அனுமதி இன்றி வணிக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீப காலமாக பிரபல நடிகர், நடிகைகளின் புகழையும் பெயரையும் தவறாக பயன்படுத்தி சில நிறுவனங்கள் விளம்பரங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரை முன்வைத்து ஒரு சிறுவன் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பாக நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் தங்களின் அடையாள உரிமைகளை பாதுகாக்க நீதிமன்றத்தின் தலையீட்டை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
If name Ulaganayagan misused there ban Kamal Haasan court