நெடுஞ்சாலையில் நேர்ந்த கொடூரம்! லாரி மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி பலி...! - தொடரும் சாலை மரணங்கள்...!
horrific incident highway cattle trader died lorry accident Road deaths continue
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்குட்பட்ட அகிலாண்டபுரம் ஊராட்சியின் சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும், மாட்டு வியாபாரியுமான பால்ராஜ் (62), கோர சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசீர்வாதம் என்பவரின் மகனான பால்ராஜ், நேற்று மாலை கயத்தாறில் தனது வியாபார பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான சத்திரப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் கடம்பூர் சாலையில் உள்ள சோசியர் மடம் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் கடம்பூரிலிருந்து கயத்தாறு நோக்கி அதிவேகமாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த கொடூர மோதலின் தாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதுடன், பால்ராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் சரிந்தார்.
இந்த காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்ராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு குடும்பத்தினரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உயிரிழந்த பால்ராஜுக்கு மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு ஆய்வாளருமான குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
English Summary
horrific incident highway cattle trader died lorry accident Road deaths continue