என் மேல் கொலைப் பழி போட்டாங்க... அதையும் மறந்துதான் ஆதரவு தந்தேன்...! - திமுக-வுக்கு எதிராக கொதித்தெழுந்த வைகோ
They accused me murder I forgot about that and supported them Vaiko rages against DMK
புதுச்சேரியில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க விழா அரசியல் அனல்பறக்கும் மேடையாக மாறியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அதிரடி கருத்துகள், திமுக மீது முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் செய்தியாளர்களுடன் நடைபெற்ற காரசாரமான கேள்வி-பதில் அமர்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“முத்தமிழ் போற்றும் 3 காண்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்ற வைகோ, தமிழ்மொழியின் பெருமை, புதுச்சேரியின் வரலாற்று சிறப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக பேசினார். பிரெஞ்சு ஆட்சியின் வரலாற்று பின்னணியை சுட்டிக்காட்டிய அவர், தமிழுக்கு தனித்துவமான மரியாதையும் மகுடமும் சூட்டிய மண்ணாக புதுச்சேரி விளங்குகிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிய அவர், நீண்டகாலமாக தமிழகத்தை ஆட்கொண்டிருந்த ஊழல் அரசியலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட ஆட்சி நடைபெறுவதாகவும் கூறினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நீடித்து மக்கள் நலனுக்காக தொடர வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க. குறித்து கடுமையாக விமர்சித்த வைகோ, அந்தக் கட்சி ஊழல் அரசியலின் முக்கிய முகமாக இருந்ததாக குற்றம்சாட்டினார். இந்திய அரசியலில் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் பிளவுகளும் இயல்பானவை என்றும், வரலாற்றில் பல தலைவர்கள் தாங்களே வளர்த்த இயக்கங்களை பின்னர் விமர்சித்த சம்பவங்கள் ஏராளம் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கரூர் விவகாரத்தில் முன்பு கூறிய கருத்து குறித்து விளக்கம் அளித்தார். “அன்று அவர் செல்லவில்லை என்பதால் விமர்சித்தேன். இன்று செல்கிறார் என்பதால் மனசாட்சி இருக்கிறது என சொல்கிறேன்” என்று பதிலளித்தார்.மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகியதால் பலர் நிம்மதி அடைந்துள்ளனர் என்ற கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, “லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையே தற்போது வெளிப்படுகிறது” என்று கூறினார்.
முன்னதாக திமுக தலைமையை பாராட்டியிருந்த நிலையில் தற்போது விமர்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு, கூட்டணியில் இருந்தபோது நல்ல செயல்களை மனதார பாராட்டியதாகவும், அதே சமயம் பல அவமானங்களை அமைதியாக தாங்கியதாகவும் தெரிவித்தார். “கூட்டணி தர்மத்திற்காக பல வேதனைகளை உள்ளுக்குள் புதைத்தேன்” என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
அதிக முறை நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது திமுக மூலம்தானே என்ற கேள்விக்கு, தனது அரசியல் பங்களிப்பு மற்றும் இயக்கத்திற்காக செய்த தியாகங்கள் அதைவிட மிகப்பெரியது என வைகோ பதிலளித்தார்.முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்து கேட்கப்பட்டபோது, “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்று சுருக்கமாகவும் கூர்மையாகவும் பதிலளித்தார்.
தமிழக முதலமைச்சர் பா.ஜ.க.வை நேரடியாக விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு, “அவருக்கு கொள்கை ரீதியான தெளிவான நிலைப்பாடு உள்ளது. காஷ்மீர் கொள்கை, இந்துத்துவ கொள்கை ஆகியவற்றை அவர் ஆதரிக்கவில்லை. மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றில் உறுதியாக நிற்கிறார்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்தனர். இதனால் சற்று ஆவேசமடைந்த வைகோ, சமீபத்தில் நடந்த சம்பவங்களைப் போல இங்கும் பதற்றமான சூழல் உருவாகும் என யாரேனும் எதிர்பார்த்தால் அது நடக்காது என்று கடுமையாக எச்சரித்தார்.
அப்போது புதுச்சேரி மாநில மதிமுக பொறுப்பாளர் ஹேமா பாண்டுரங்கன் தலையிட்டு, செய்தியாளர்கள் ஒழுங்குமுறையுடன் ஒவ்வொருவராக கேள்வி கேட்க வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பும் பதற்றமும் கலந்த சூழல் நிலவியது.
English Summary
They accused me murder I forgot about that and supported them Vaiko rages against DMK