ரஜினி, தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போயஸ் கார்டனில் பரபரப்பு - விசாரணையில் அம்பலமான உண்மை!
Hoax Bomb Threat Hits Poes Garden Police Swiftly Secure Rajinikanth and Dhanushs Homes
சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மர்ம மின்னஞ்சலில், நடிகர்களின் வீடுகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் இல்லங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் காவல்துறையினர் அந்தந்த இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்ட பல மணி நேரத் தேடுதல் வேட்டைக்குத் பிறகு, அங்கு வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இது ஒரு போலியான மிரட்டல் (Hoax Call) என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், தற்போதைய தேர்தல் காலப் பரபரப்பான சூழலில் இத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்படுவது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போயஸ் கார்டன் மற்றும் முக்கியமான விஐபி குடியிருப்புகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாகச் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த சில காலங்களாகவே நடிகர்கள் விஜய், திரிஷா, நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா போன்ற பிரபலங்களின் வீடுகளுக்கும் இது போன்ற போலி மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேவையில்லாமல் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
English Summary
Hoax Bomb Threat Hits Poes Garden Police Swiftly Secure Rajinikanth and Dhanushs Homes