கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டிய அண்ணாமலை! 2031-ல் மீண்டும் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் வரும்!Gen Z வைத்து அண்ணாமலை போடும் பிளான் இதுதான்!
A major change in governance will occur again in 2031 Here is the plan Annamalai is devising with Gen Z
பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் முதல் மாநில மாநாட்டை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக நடத்தினார். "போதையில்லா தமிழகம்" என்ற இலக்கை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, இளைஞர்களின் பங்கேற்பு அதிகம் இருந்தது.
மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, தனது அமைப்பின் முக்கிய பலம் இளைஞர்கள்தான் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, Gen Z தலைமுறையினரின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், எதிர்கால அரசியல் மாற்றங்களில் அவர்களே முக்கிய பங்காற்றப் போவதாகவும் தெரிவித்தார்.
"ஒருவர் தேசியவாதியா என்று கேட்டால், நான் பெருமையுடன் 'ஆம்' என்று சொல்வேன். இந்தியனாக இருப்பதில் எனக்கு பெருமை இருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் பயணம். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். திருநீறும் குங்குமமும் அணிவேன். ஆனால், வீட்டை விட்டு வெளியே வரும் போது என் மதத்தையும் சாதியையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, அனைவருக்கும் பொதுவான மனிதராகவே மக்களைச் சந்திக்கிறேன். உண்மையான இந்து அனைவரையும் சமமாக மதிப்பான்; அனைவரையும் சமமாக நடத்துவான்" என்று அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து, இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து பேசிய அவர், "Gen Z தலைமுறையினரிடம் பேச முடியாது, அவர்கள் நினைத்ததை மட்டும் செய்வார்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்த மேடையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் Gen Z இளைஞர்கள்தான். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் அந்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான். இன்றைய இளைஞர்கள் மாற்றத்தை விரைவாக விரும்புகிறார்கள். அவர்கள் சமூகத்தை வித்தியாசமான பார்வையில் பார்க்கிறார்கள். அவர்களின் குரலை அரசியல் கேட்க வேண்டிய காலம் இது" என்றார்.
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர் விவரங்களையும் அவர் பகிர்ந்தார். "எங்கள் அமைப்பில் தற்போது 19 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 18 முதல் 25 வயது வரையிலானவர்கள் 14 சதவீதம். 26 முதல் 39 வயது வரையிலானவர்கள் 40 சதவீதம். மொத்தத்தில் 39 வயதுக்குட்பட்டவர்கள் 53 சதவீதமாக உள்ளனர். இது முழுக்க இளைஞர்களின் இயக்கமாக உருவெடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "39 வயதுக்குக் குறைவான இளைஞர்கள்தான் 2026-ஆம் ஆண்டில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினர். அதே இளைஞர்கள்தான் 2031-ஆம் ஆண்டிலும் இன்னொரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கப் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு, எதிர்கால அரசியலில் இளைஞர்களை மையமாகக் கொண்டு தனது அரசியல் திட்டங்களை முன்னெடுக்கப் போவதாகக் கருதப்படும் முக்கிய அறிவிப்பாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
English Summary
A major change in governance will occur again in 2031 Here is the plan Annamalai is devising with Gen Z