குண்டர்களை வைத்து கொடூர தாக்குதல் நடத்திய திருமாவளவன் மீது வழக்கு பதியவேண்டும் - பாஜக போர்க்கொடி!
HC VCK Thirumavalavan DMK Govt BJP
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விடுத்துள்ள அறிக்கையில், "இன்று சென்னை உயர்நீதிமன்றம் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், தன்னுடைய ஆடம்பர காரின் முன் வழிகொடுத்து விலகாமல், இடையூறாக இருசக்கரவாகனத்தில் சாலையில் சென்றார் என்று சொல்லி, ஒரு வழக்கறிஞரை, தன் குண்டர்களை வைத்து கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்.
அந்த வழக்கறிஞர் உயிருக்கு பயந்து மெட்ராஸ் பார் கவுன்சில் உள்ளே ஓடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி வழக்கறிஞர் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது.
சட்டத்தின் கோவில் என்று போற்றப்படும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் முன்பாகவே, ஒரு வழக்கறிஞரையே தாக்கும் அளவிற்கு விசிக (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) கும்பலுக்கு எங்கிருந்து இந்தத் தைரியம் வந்தது? இந்தக் கொடூரமான தாக்குதல், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திமுக ஆட்சியிலுருக்கும் தைரியமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த அரசாங்கத்தின் மெத்தனப் போக்கினால்தான், சட்டத்தை காக்கும் வழக்கறிஞர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (MHAA) உடனடியாகத் தலையிட்டு, பெரும்போராட்டத்தை அறிவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் மீதான இந்த அத்துமீறலை சங்கம் வேடிக்கை பார்த்தால், அது வழக்கறிஞர் சமூகத்தின் மீதான தாக்குதலை அங்கீகரிப்பது போல ஆகிவிடும். சட்டத்தின் மீதும், சட்டத்தைக் காப்பவர்கள் மீதும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்குச் சங்கம் வீதிக்கு வந்து போராட வேண்டும்.
இந்த தாக்குதல் பார் கவுன்சில் வாசலிலேயே நடைபெற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுதி செய்யவேண்டும். விரைவில் பார் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் உரிமைகளை காற்றில் பறக்கவிட்டவிட்டு யாரிடம் சென்று ஓட்டு கேட்பது என்று பார் கவுன்சில் உறுப்பினர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
மேலும், தமிழக காவல்துறை, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை முதல்குற்றவாளியாகச் சேர்த்து வழக்கு பதிய வேண்டும். வன்முறையைத் தூண்டும் சக்திகள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும்.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். தங்கள் வளாகத்திலேயே நடந்துள்ள இந்த விவகாரத்திற்கே நீதி வழங்கவில்லை என்ற அவப்பெயர் நீதிமன்றத்திற்கு ஏற்படாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். நீதித்துறையின் மாண்பைக் காக்க, நீதிமன்றம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை கிடைப்பது உறுதி செய்ய வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக ‘வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம்’ இயற்றவேண்டும். அதில் SC/ST சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.
English Summary
HC VCK Thirumavalavan DMK Govt BJP