சட்டம் காக்க வேண்டிய கரங்களில் 'கஞ்சா' கட்டுக்கள்...! நெல்லையில் ரூ.7 லட்சம் பணத்துடன் சிறை அதிகாரி சிக்கியது எப்படி...?
Ganja tied hands that should protect law How did prison officer get caught 7 lakh
நெல்லையில் சொகுசு காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக நடத்தப்பட்ட சோதனையில், இரண்டாம் நிலை சிறை காவல் அதிகாரி மற்றும் அவரது நண்பர் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.7 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொகுசு காரை பயன்படுத்தி பெருமளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை காவலர்கள் வழிமறித்து சோதனை செய்தனர். காருக்குள் சோதனை மேற்கொண்டபோது, கஞ்சா மறைத்து வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு காரையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த இரண்டாம் நிலை சிறை காவல் அதிகாரி தமிழரசன் என்பதும், மற்றொருவர் அவரது நண்பர் என்பதும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சாவை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்ததாக சிறை காவல் அதிகாரி தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மீது 1985-ம் ஆண்டு போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லை மாநகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கஞ்சா கடத்தல் வழக்கில் சட்டத்தை அமல்படுத்தும் துறையைச் சேர்ந்த சிறை காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ganja tied hands that should protect law How did prison officer get caught 7 lakh