தமிழகத்தில் வெளிநாட்டு சிகரெட் லைட்டர் விற்றால் நடவடிக்கை - அமைச்சர் விடுத்த அறிவிப்பு!
Foreign lighters issue tamilnadu
சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது, பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ. கணேசன் அறிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்/வாரியத் தலைவர் சி. வெ. கணேசன் தலைமையில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று கொண்ட அமைச்சர், சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் கூட்டத்தில் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி. திருமணம், மகப்பேறு. கண்கண்ணாடி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும்போது எதிர்பாரா விதமாக ஏற்படும் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித் தொகை மற்றும் ஈமச் சடங்கு செலவினம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Foreign lighters issue tamilnadu