தமிழகம் முழுவதும் அதிகரிக்கும் காய்ச்சல் – பொது இடங்களில் முககவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
Fever increasing across Tamil Nadu Health Department advises to wear masks in public places
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் தினசரி 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானோர் இன்ஃபுளூயன்சா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் எனவும், அது மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
முக்கியமாக, இருமல் அல்லது தும்மல் மூலம் அருகில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை எடுக்கப்படுவது அவசியமாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:“பருவ கால மாற்றம் காரணமாக இன்ஃபுளூயன்சா வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் தான் அதிகமாகக் காணப்படுகின்றன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லும் போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறிய குழந்தைகள், வயதானவர்கள், நீரிழிவு, இருதய நோய் போன்ற இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி முககவசம் அணிந்து செல்வது நல்லது. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். ஆனால், முககவசம் அணிதல் கட்டாயமில்லை” என்று அவர்கள் கூறினர்.
மருத்துவர்கள், தேவையான தூய்மை பழக்கவழக்கங்கள், போதிய ஓய்வு, சத்தான உணவு ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனவும், சிறிய அறிகுறிகளே இருந்தாலும் அதை கவனிக்காமல் விடாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் எனவும் வலியுறுத்துகின்றனர்.
English Summary
Fever increasing across Tamil Nadu Health Department advises to wear masks in public places