காலி பாட்டில் வீச்சுக்கு முற்றுப்புள்ளி: சென்னையில் டாஸ்மாக் ‘ரிட்டர்ன் ஸ்கீம்’ இன்று முதல்...!
End empty bottle throwing Tasmac return scheme starts today in Chennai
மது அருந்திய பின்னர் போதை தலைக்கு ஏறிய நிலையில், பலர் காலி மதுபாட்டில்களை சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு மட்டுமின்றி, வாயில்லா ஜீவன்களுக்கும் கடுமையான காயங்கள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது.
இந்த அலட்சியப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

முதற்கட்டமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் படி, மதுபானம் வாங்கும் போது அதன் அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
மது அருந்திய பின்னர் காலி பாட்டிலை மீண்டும் கடையில் ஒப்படைத்தால், அந்த ரூ.10 தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,பொது இடங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மதுபானம் வாங்கும்போது பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும். பின்னர் காலி பாட்டில்களை அதே மதுபான விற்பனை கடையில் ஒப்படைக்கும் போது, அவர்கள் செலுத்திய ரூ.10 தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சமூக பொறுப்புணர்வும் இணையும் இந்த முயற்சி, பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க உதவும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
English Summary
End empty bottle throwing Tasmac return scheme starts today in Chennai