ரூ.1800 கோடி நிலுவைத் தொகை.! விரைந்து வசூலிக்க மின்வாரியம் உத்தரவு.!
Electricity Board orders to collect 1800 crore dues quickly
உள்ளாட்சி அமைப்புகளிடம் நிலுவையில் உள்ள 1,800 கோடி ரூபாயை தொகையை விரைந்து வசூலிக்குமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார அளவினை கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். தாமதம் ஆனால் அபராதத்துடன் மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கப்படும்.
அந்த கால அவகாசத்திற்குள்ளும் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை எனில் மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராத தொகையுடன் மின் கட்டணம் செலுத்திய பிறகு, மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும்.
தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் போன்ற சேவை பணிகளில் ஈடுபடுகின்றன.
இதனால், அவற்றுக்கு மட்டும் மின்சார பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டதில் இருந்து கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் அந்த உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஒழுங்காக மின் கட்டணத்தை செலுத்துவதில்லை.
ஏற்கனவே, மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில், உள்ளாட்சி அமைப்புகள் ஜூலை நிலவரப்படி மின் கட்டணம் செலுத்தாமல் சுமார் 1,800 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளன.
இதனால், மின்சார வாரியத்திற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி, மின் கட்டணத்தை வசூலிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், குறிப்பாக ஊராட்சிகளில் பல மின் இணைப்புகள் பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியல், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர்களின் அனுமதியுடன், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, கணக்குகளை முடிக்குமாறும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
English Summary
Electricity Board orders to collect 1800 crore dues quickly