தலைமைச் செயலருடன் திமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை..புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!
DMK MLAs consult with the Chief Secretary Excitement in Puducherry politics
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா மற்றும் பாகூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா. செந்தில்குமார் ஆகியோர் தலைமைச் செயலாளர் சரத் சவுகான் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை சந்தித்து பேசினர்.
அப்போது, புதுச்சேரி நகரத்தின் மையப்பகுதியில் உள்ள உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற குடிநீர் அருந்திய 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருவதும், 7க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் பிரச்சனைக்கு உரிய மூல காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த தலைமைச் செயலாளர் நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகரில் கழிவுநீரோடு குடிநீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து, கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் கிராமப் பகுதியில் குப்பைகளை சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஹச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் குப்பைகளை சேகரிக்க அதிக அளவில் அரசு பணம் கொடுத்தும், போதிய வாகனங்கள், துப்புரவு தொழிலாளர்கள் இல்லாமல் குப்பைகள் சேகரிப்பதில் தொய்வு ஏற்பட்டு, கிராம பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறியபோது, அந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்த தலைமைச் செயலர், இதுகுறித்து உரிய நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் புதுச்சேரி அரசின் பங்களிப்பு இல்லாத காரணத்தால் தடைபட்டிருப்பது குறித்து கேட்டதற்கு இன்னும் ஒரு வார காலத்தில் விடுபட்ட கிராம சாலைகள் திட்ட பணிகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொய்வின்றி நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஒதியம்பட்டு ஹடிசைன் தொழிற்சாலையில் 25 ஆண்டுகள் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த ஊதியம் வழங்குவது, ஐந்து ஆண்டுகளாக பண்டிகைக் கால போனஸ் வழங்காமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட தொழிலாளர் சட்ட விதிகளை பின்பற்றாமல் நிர்வாகம் செயல்படுகிறது. நிர்வாகம் சார்பில் அரசுக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புகாரை முன்வைத்தபோது, நிர்வாகத்திடம் பேசி தொழிலாளர்களுக்கு நல்ல பதில் சொல்வதாக தலைமைச் செயலர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, புதுச்சேரி மக்களுக்கு 4 மாதங்களாக அரிசி வழங்காமல் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தபோது, இன்னும் 15 நாட்களுக்குள் அரிசி வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
English Summary
DMK MLAs consult with the Chief Secretary Excitement in Puducherry politics