ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதற்றம்: மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: வனவிலங்குகள் ஓட்டம்..!
Terrible forest fire in the Western Ghats near Srivilliputhur
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்துள்ளதாகவும், இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள் மட்டுமல்லாமல் சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மலைப்பாம்புகள், ராஜநாகம் உள்ளிட்ட பல வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக போதிய மழை இல்லாததால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவுள்ளது.

இதனிடையே நேற்று இரவு சுமார் 08 மணியளவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள அழகர்கோவில் வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீப்பிடித்துள்ளது. அங்கு காற்றும் வேகமாக வீசியதால் மளமளவென தீ பரவத்தொடங்கியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீ வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களும் உதவியுள்ளனர். குறித்த காட்டுத் தீ பரவியதால் வனப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்துள்ளன. இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில்,'வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Terrible forest fire in the Western Ghats near Srivilliputhur