நீதிமன்றக் காவலில் மரணம்: 'மாற்றுத் திறனாளி இளைஞர் சபரிவர்மன் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும்'; உதயநிதி வலியுறுத்தல்..!
Udhayanidhi insists that justice should be given to the family of Sabarivarman who died in judicial custody
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்துள்ள நிலையில், அவரை காவல் துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாக குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ''சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல் துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது. இந்த மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது;
''நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டபோது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும். சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல் துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல் துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Udhayanidhi insists that justice should be given to the family of Sabarivarman who died in judicial custody