'பணம் தர்றியா இல்லையா...?' போதை ஆசாமியின் வெறிச்செயல்...பெற்ற தாயை அடித்துக் கொன்ற தொழிலாளி அதிரடி கைது...!
Did you give me money or not drug addict crazy act worker who beat his mother death arrested
திருவண்ணாமலை வந்தவாசி அருகே நிகழ்ந்த தாயைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மதுபழக்கத்தால் ஏற்பட்ட தகராறு, இறுதியில் வயதான தாயின் உயிரைப் பறித்த சோகச் சம்பவமாக மாறியுள்ளது.வந்தவாசி அருகேயுள்ள கீழ்பாதிரி கிராமத்தைச் சேர்ந்த மங்கலட்சுமி (78).
இவர் தனது மகன் ஏழுமலை (47), கூலித்தொழிலாளியுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 27-ஆம் தேதி, ஏழுமலை தனது தாயிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மங்கலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, தனது தாயை கடுமையாக தாக்கியதுடன், அவரது காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.படுகாயமடைந்த மங்கலட்சுமியை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மங்கலட்சுமியின் மகளான பழைய பந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இருசம்மாள், வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில், காவலர்கள் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஏழுமலையை கைது செய்த காவலர்கள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயிடம் மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறு, கொலைச் சம்பவமாக முடிந்த இந்த அதிர்ச்சி நிகழ்வு, வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Did you give me money or not drug addict crazy act worker who beat his mother death arrested