'மக்களுக்கு நல்லது நினைத்தால் இயற்கையே துணையாக நிற்கும்'..! அமைச்சர் கீர்த்தனாவின் அதிரடிப் பேச்சு...!
If you think good people nature support you Minister Keerthana powerful speech
கர்நாடகா - தமிழ்நாடு இடையேயான காவிரி நீர் பகிர்வு விவகாரம் பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்ட ரீதியாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கான உரிய நீர் பங்கீட்டை உறுதி செய்யும் நோக்கில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று நீர்வரத்து நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்தக் கூட்டத்தின் முடிவில், ஜூலை 29-ஆம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு குழு உத்தரவிட்டது.

எனினும், கர்நாடக மாநிலத்தில் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகள் அதிகரித்திருப்பதால், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட இயலாது என கர்நாடக அரசு தெரிவித்தது. மேலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும் கர்நாடக அரசு முறையீடு செய்தது.
கர்நாடக அரசின் முறையீட்டை பரிசீலித்த காவிரி மேலாண்மை ஆணையம், முறைப்படுத்தும் குழு வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தியது. அதன்படி, தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகாவின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.84 அடி முழு நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 81.95 அடியை எட்டிய நிலையில், உபரி நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், உபரி நீரை வெளியேற்றுவது தவிர வேறு வழியில்லை என்றும், இயற்கை என்பது எந்த மாநிலத்திற்கும் தனிச்சொத்து அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.இந்தச் சூழலில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளப் பதிவில், "நல்ல மனமும் மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலேயே அமைகிறது என்றும், கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்திருப்பது, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை தடைகள் வந்தாலும் மக்களின் நலனையே முதன்மையாகக் கருதி செயல்பட்டு வரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் மக்கள் நல நோக்கத்திற்கு இயற்கையே உறுதுணையாக இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீரால் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, டெல்டா விவசாயிகளின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாகவும், மக்கள் நலனை முன்னிறுத்தும் நல்ல எண்ணங்களுக்கு இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் துணையாக இருக்கும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
If you think good people nature support you Minister Keerthana powerful speech