நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியா...! 2040-க்குள் நிலவில் கால்பதிப்போம்...! - இஸ்ரோ தலைவர் வைத்த மெகா இலக்கு...!
India send man moon We will set foot on moon by 2040 mega goal set by ISRO chief
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாற்றைப் படைக்கும் நோக்கில், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் உருவாக்கவும், 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பவும் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,"இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டுமெனில், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். ஆராய்ச்சிகள் ஆய்வுக் கட்டுரைகளாக மட்டுமே முடிவடையாமல், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களாக, புதிய கண்டுபிடிப்புகளாக, காப்புரிமைகளாக மற்றும் உலகச் சந்தையில் போட்டியிடும் தயாரிப்புகளாக உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, இயற்கைப் பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர்வள மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் திறம்பட சேவையாற்றி வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள், மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்வதற்கும், அதிக மீன் வளம் உள்ள பகுதிகளை கண்டறிவதற்கும் உதவுவதன் மூலம் அவர்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்தியா தனது சொந்த திறனில் கிரையோஜெனிக் உந்துவிசை தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்கியிருப்பது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளித் துறையில் இந்தியா இன்று தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சந்திரயான் திட்டத்தின் வெற்றியும், ஒரே ஏவுதளப் பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய உலகச் சாதனையும் இஸ்ரோவின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய முக்கிய மைல்கற்கள் என தெரிவித்தார்.
எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், மாணவர்களுக்கு கூட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பயிற்சி, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் பங்கேற்கும் கூடுதல் வாய்ப்புகளை இஸ்ரோ தொடர்ந்து உருவாக்கி வழங்கும் என்றும் வி. நாராயணன் தெரிவித்தார்.
English Summary
India send man moon We will set foot on moon by 2040 mega goal set by ISRO chief