7 மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தும் இடம் கிடைக்கவில்லை... நெல்லை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்...!
Despite applying 7 medical colleges she did not get place tragedy that befell Nellai student
நெல்லையில், தான் விரும்பிய மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பெருமாள்புரம் அன்புநகர் சித்தார்தர் நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தற்போது வீட்டிலிருந்தபடியே இணையவழியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பமில்தா.

இந்த தம்பதியின் மூத்த மகள் சுருதிலயா, 21 வயதானவர்.பிளஸ்-2 படிப்பை முடித்த சுருதிலயா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமிழகத்தில் உள்ள 7 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்காக கலந்தாய்வில் விண்ணப்பித்திருந்தார்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் சுருதிலயாவின் பெயர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தான் விரும்பிய மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் இருந்து சுருதிலயா வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள குடோனில் சுருதிலயா உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவரது உடலை காவலர்கள் மீட்டு, உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Despite applying 7 medical colleges she did not get place tragedy that befell Nellai student