'முதலில் யார் கட்டினார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்'...! - கல்வெட்டு விவகாரத்தில் மேயர் ஜெகன் காட்டம்
Find out who built it first Mayor Jagan inscription issue
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்டிட கல்வெட்டில் அமைச்சர் மதன் ராஜாவின் பெயரை இடம்பெறச் செய்வது தொடர்பாக கவுன்சிலர்கள் வலியுறுத்திய நிலையில், அதற்கு மேயர் ஜெகன் அளித்த பதில் காரசார விவாதத்துக்கு வித்திட்டது.

சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த தி.மு.க. கவுன்சிலர் ராமர் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர் மந்திரமூர்த்தி ஆகியோர் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்த கட்டிடத்தின் கல்வெட்டில் அவரது பெயரையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் ஜெகன், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகையா நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தின் கல்வெட்டில் அமைச்சர் மதன் ராஜாவின் பெயரை சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேயர் ஜெகன் மேலும் தெரிவித்ததாவது,"ஏற்கனவே மற்றொருவரின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டில் புதிதாக மற்றொரு பெயரை சேர்க்க முயற்சிக்கிறீர்கள். முதலில் அந்தக் கட்டிடம் யாருடைய நிதியில், எந்த முயற்சியில் உருவாக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் நாங்கள் கட்டிய பல்வேறு கட்டிடங்களை தற்போது அமைச்சர்கள் திறந்து வைத்து வருகின்றனர்.
எனது பெயர் இடம்பெறக்கூடாது என நினைப்பவர்கள், அவர்களது செயல்பாடுகளால் அவர்களாகவே முடிவுக்கு வருவார்கள்” என மேயர் ஜெகன் தெரிவித்தார்.
மேயரின் இந்தக் கருத்துக்கு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்களுக்கு இடையே கருத்து மோதல் உருவானதால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
English Summary
Find out who built it first Mayor Jagan inscription issue