டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்... கோர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி..!
3 college students tragically die car accident after tire bursts and car loses control
சென்னை அருகே தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் காரில் புதுச்சேரி சென்று விட்டு, மீண்டும் சென்னை நோக்கி திரும்பியபோது நிகழ்ந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று காரில் புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, அதே காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி தூக்கி வீசப்பட்டது.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தை அறிந்ததும் அப்பகுதியினர் விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்த மாணவர்கள் குறித்த விவரங்களை விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
3 college students tragically die car accident after tire bursts and car loses control