தமிழகத்தில் மிக தீவிரமாக டெங்கு காய்ச்சல்! சிபிஐ கட்சி பாய்ச்சல்!
Dengue in tamilnadu
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கை" தமிழகத்தில் மிக தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருப்பூரில் நேற்றைக்கு முன்தினம் ஒரு குழந்தை மற்றும் சென்னையில் முகப்பேறு பகுதியில் 6 வயது குழந்தையும், அடுத்து எட்டு வயது குழந்தை, மீண்டும் திருப்பூரில் 5 வயது குழந்தை என டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். அரசு உரிய முன் முயற்சிகள் எடுக்காததன் விளைவு இது.
மேலும் டெங்கு பரவி தமிழகம் முழுவதும் பரவலாக அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்றுவருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு சுற்றறறிக்கைகள் மூலம் அரசு மற்றும் தனியார் துறை மருத்துவமனைகளுக்கு வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. இதுபோதாது. மாறாக தமிழக அரசு டெங்கு காய்ச்சலின் தீவிர தன்மையை உணர்ந்து ஏடிஸ் கொசுக்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க சுகாதாரதுறைக்கும், மருத்துவத்துறைக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் கூடுதல் அழுத்தங்களை தருவது சிறந்ததாகும்.
இப்பணியில் கூடுதல் மருத்துவர்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதி, டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு உயிர்காக்கும் சிறப்பு சிகிச்சை, சிறப்பு பராமரிப்பு என கூடுதல் கவனம் செலுத்த முன்வர வேண்டுமென தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் மக்கள் நெருக்கமான பகுதிகளிலும், குழந்தை மற்றும் சிறார் பள்ளிக்கூடங்களிலும் கூடுதல் விழிப்புணர்வை உருவாக்க சிறப்பு கவனம் செலுத்த முன்வரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.