செல்போன் மோகத்தால் நேர்ந்த கொடூரம்...! - தங்கையுடன் சண்டை போட்ட பிளஸ்-2 மாணவி தற்கொலை...!
cruelty caused by cell phone craze Plus 2 student committed suicide after fighting her younger sister
சேலம் அருகேயுள்ள சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள்களான திவ்யபாரதி (17), ரமணி (14) ஆகியோர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்று வந்தனர்.நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இருவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பினர்.
அதன்பின்னர் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக சகோதரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவாதம் பின்னர் வாக்குவாதமாக மாறிய நிலையில், மனவருத்தமடைந்த திவ்யபாரதி வீட்டிலிருந்த தனி அறைக்குச் சென்று துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் உடனடியாக அவரை மீட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீராணம் காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த துயரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், மாணவியின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் வயதிலேயே மாணவி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், பள்ளி ஆசிரியர்களையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
cruelty caused by cell phone craze Plus 2 student committed suicide after fighting her younger sister