தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்; பாடப்பிரிவை தேர்வு செய்ய நாளை மறுதினம் வரை அவகாசம்..!
General counselling for engineering courses begins in Tamil Nadu
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 02 லட்சத்து 36 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, கடந்த 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதன் முதல்கட்டமாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மூலம் 137 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
அதன்பின், கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது.

இதன் போது, பொது தரவரிசையில் 01 முதல் 37,976 வரையிலான இடங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய நாளை மறுதினம் மாலை 05 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அதை அவர்கள் வரும் 25-ஆம் தேதி மாலை 05 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வழங்கப்படவுள்ளது. மேலும், இதே முறையில் 02 மற்றும் 03 வது சுற்று கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
English Summary
General counselling for engineering courses begins in Tamil Nadu