உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்; 04 இந்தியர்கள் உயிரிழப்பு; கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு..!
The Central Government has condemned the death of 04 Indians in the attack on a cargo ship in Ukraine
உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில்,மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாள் முதல் இன்றுவரை ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை திங்கட்கிழமை (ஜூலை 20) அன்று வெளியிட்ட நிலையில் அதில் கூறியுள்ளதாவது;

''ஜூலை 19, 2026 அன்று உக்ரைன் நாட்டின் ஒடேசா நகரில் இருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த கப்பலில் 17 மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள்.
எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாண்டு வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர் விரைந்து குணமடைய வேண்டும்.

இந்த வகையான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. சரக்கு கப்பல் மற்றும் அதில் பயணிக்கும் மாலுமிகள் மீதான இந்த வகை தாக்குதல் வருந்ததக்கது. இது கப்பல் போக்குவரத்தை தடைசெய்யும் வகையிலான தாக்குதலாகும்.'' அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா காரணம் என்று உக்ரைன்குற்றம் சுமத்தியுள்ளதோடு, தாக்குதலுக்கு ஆளான கப்பல் தானியத்தை கொண்டு சென்றுள்ளதாகவும், மூன்று ஏவுகணைகள் குறித்த கப்பலை தாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் தாக்குதலுக்கு ஆளான இந்த கப்பலில் சிரியா மற்றும் இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர். இந்த கப்பலில் பயணித்த 17 பேரில் 08 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
English Summary
The Central Government has condemned the death of 04 Indians in the attack on a cargo ship in Ukraine