தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பின் கொரோனா உயிரிழப்பு...!!
Corona death in TamilNadu after 4 months
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் ஒமிக்ரைன் வகை தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மொத்தம் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிந்தாமணி பகுதி பூசாரி தெருவை சேர்ந்த உதயகுமார் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று உள்ளார். பின்னர் திருச்சியில் உள்ள வீட்டிற்கு திருப்பிய அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உதயகுமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்வதற்கு முன்பே இன்று காலை உயிரிழந்துள்ளார். பின்னர் மதியத்திற்கு மேல் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேசியதாவது "கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த உதயகுமாருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஒருநாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறனர்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Corona death in TamilNadu after 4 months