3, 5 மற்றும் 8–ஆம் வகுப்பிற்கு கட்டாய தேர்வு..திமுக கண்டனம்!
Compulsory examination for classes 3 5 and 8 DMK condemns
புதுச்சேரியில் 3, 5 மற்றும் 8–ஆம் வகுப்பிற்கு கட்டாயம் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி பாஜக–என்.ஆர் காங்கிரஸ் அரசு மாநில மாணவர்கள் நலன்களை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசின் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை திணிக்கும் விதத்தில் புதிய கல்வித் திட்டத்தையும் சிபிஎஸ்இ மற்றும் மும்மொழி பாடத்திட்டத்தையும் மாணவர்கள் இடையே திணித்து அவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கையே ஆதிக்க சாதிகளின் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்கவும், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள ஆண்டாண்டாய் கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை தொடர்ந்து அடிமை வேலை செய்பவர்களாக மாற்றும் திட்டத்தையும் கொண்டது என்பதால், அதனை தொடக்கம் முதல் எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் உள்ளே விடமாட்டோம் என்று தடுத்து வருகிறார்
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆனால் புதுச்சேரி அரசு சென்ற ஆண்டு வரை தமிழ்நாட்டின் பாடத் திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தையும், இருமொழிக் கொள்கையையும் பின்பற்றி வந்தது. பாஜகவின் நெருக்கடியால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவிட்டு சிபிஎஸ்இ என்ற பெயரில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை திணிக்க துவங்கி உள்ளனர்.
அதன்படி 1–ஆம் வகுப்பு முதல் ஆங்கில வழி கல்வி கொண்டுவந்து அரசு பள்ளிகளில் கடந்தாண்டு பயிற்சி இல்லாத ஆசிரியர்களால் சரியாக பாடம் நடத்த முடியவில்லை. காரணம் இன்றைக்கு அரசு பள்ளியில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் வழிக்கல்வியில் வந்தவர்கள். அதன் விளைவு 9–ஆம் வகுப்பு 11–ஆம் வகுப்பு தேர்வுகளில் சென்ற ஆண்டு 75 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதையும் நாங்கள் சுட்டிக்காட்டி இருக்க்கிறோம்.
இவ்வாண்டு முதல் 3,5 மற்றும் 8–ஆம் வகுப்புகளில் அரசு தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அப்படி நடைபெற்றால் தனியார் பள்ளிகள் எப்படியாவது தங்கள் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்னவாகும். பெரும்பான்மை ஏழ்மை நிலையில் இருந்து வரும் அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வுகளில் தோல்வி கண்டு படிப்பை பாதியில் விட்டுவிட்டு, மாடு மேய்க்கவும், கூலி வேலைக்கும், குலத்தொழிலுக்கும் செல்லும் அவலம் ஏற்பட போகிறது. இதன் மூலம் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் பிள்ளைகளை உடல் உழைப்பை தேடிச்செல்லும் கேவலமான நிலையை இந்த அரசு ஏற்படுத்துகிறது. இதற்குதான் முதல்வர் ஆசைப்படுகிறாரா?. தான் சார்ந்த சமூக மக்களை கல்வியில் இருந்து வெளியேற்றிவிட்டு ஆதிக்க சாதியின் ஊதுகுழலாக முதல்வர் மாறப்போகிறாரா?. இதற்கு முதல்வர் தன் நெஞ்சைத் தொட்டு பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்ற தேர்வுகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை புதுச்சேரி முதல்வர் எடுப்பாரா?. இல்லை இந்த மாணவர்களை கல்வியற்ற சமூகமாக மாற்றப்போகிறாரா?. கல்விக்கண் திறந்த காமராசரின் வாரிசு என்று தன்னை பிரகடனப்படுத்தும் முதல்வர் அவர்கள் சொந்த மண்ணின் மாணவர்களின் கல்வி வாய்ப்பை பரிக்க போகிறாரா?.
இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் தி.மு.கழகம் இந்த அநீதியை எதிர்த்து மக்களை திரட்டி சமூக நீதிக்கான தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த அரசை எச்சரிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
.
English Summary
Compulsory examination for classes 3 5 and 8 DMK condemns