கலெக்டரின் அதிரடி உத்தரவு...! - தாமிரபரணியை அசுத்தப்படுத்தினால் ரூ.2,000 அபராதம்...!
Collectors order 2000 fine polluting copper pond
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாப்பது மற்றும் ஆற்றில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் மோணிகா ராணா முன்னிலை வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் சுகுமார், தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகள், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 4 நாட்களாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறப்பு தூய்மை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆற்றில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை வீசியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் இதுவரை ரூ.26 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் நகராட்சி, முக்கூடல் பேரூராட்சி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட மேலநத்தம், கருப்பந்துறை, சி.என். கிராமம், வண்ணார்பேட்டை, மணிமூர்த்திஸ்வரம், அருகன்குளம், நாரணம்மாள்புரம் உள்ளிட்ட தாமிரபரணி கரையோர பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை ஆற்றில் வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கலெக்டர் சுகுமார் எச்சரித்துள்ளார்.
English Summary
Collectors order 2000 fine polluting copper pond