மிளகாய்ப்பொடி வீச்சு... அடுத்த நொடியே கத்திக்குத்து...! தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு...நண்பர் தற்கொலை முயற்சி...! நடந்தது என்ன...?
Chilli powder attack next second knife attack DMK leader dies friend attempts suicide What happened
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நண்பர்களாக பழகி வந்த இரு தி.மு.க. பிரமுகர்களுக்கு இடையே ஏற்பட்ட சந்தேகம் கொலைச் சம்பவமாக மாறியுள்ளது. முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசி நிலைகுலையச் செய்த பின்னர், ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தி ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரம் செய்து வந்த இவர், தி.மு.க. பிரமுகராகவும் இருந்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (65) என்பவரும் தி.மு.க. பிரமுகர். இருவரும் நீண்டகால நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.இந்த நிலையில், நாகராஜுக்கும் தனது மனைவிக்கும் தவறான தொடர்பு இருக்கலாம் என கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை நாகராஜ் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேநீர் வாங்குவதற்காக புறப்பட்டார். நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கந்தசாமி அவரை வழிமறித்தார்.நாகராஜ் வாகனத்தை நிறுத்துவதற்குள், கந்தசாமி அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசியதாக தெரிகிறது.
இதனால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நிலைகுலைந்த நாகராஜ், வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கந்தசாமி, தான் மறைத்து வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால் நாகராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.கந்தசாமியின் கொடூர தாக்குதலில் நாகராஜின் கழுத்து, தலையின் பின்பகுதி, வயிறு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து கந்தசாமி அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை காவலர்கள் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.கொலை சம்பவத்துக்குப் பிறகு கந்தசாமியை பிடிக்க காவலர்கள் தீவிரமாக தேடுதல் மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியில் அவர் தனது வலது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.உடனடியாக அவரை மீட்ட காவலர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம், சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chilli powder attack next second knife attack DMK leader dies friend attempts suicide What happened