சென்னையில் கஞ்சா விற்ற யூடியூபர் கைது!
Chennai Ganja case Youtuber arrested
சென்னையில் உயர்ரக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட யூடியூபர், கல்லூரி மாணவர் உள்ளிட்ட நால்வர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக நகர போலீஸார் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து சிறப்பு படைகளை அமைத்துள்ளனர். அதன்படி இன்று காலை சூளைமேடு, கமலா நேரு நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நால்வரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த பதில்களில் முரண்பாடு ஏற்பட்டதால் சோதனை மேற்கொண்டதில், உயர்தர கஞ்சா, கஞ்சா ஆயில் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, சூளைமேட்டையைச் சேர்ந்த பிரதாப் (27), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஜனார்த்தனன் (27), கீழ்கட்டளையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் (21), பூந்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வாசிம் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், பிரதாப் யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும், ஜனார்த்தனன் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், பூர்ணசந்திரன் பிபிஏ படித்து வருவதாகவும், அப்துல் வாசிம் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக இருப்பதாகவும் தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai Ganja case Youtuber arrested